court

ஒன்றிய அரசின் அதிகாரிகளை மாநில அரசு விசாரிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து!

“ஒன்றிய அரசின் அதிகாரிகள் தவறு செய்யும் போது அதனை விசாரணை செய்வதற்கு, மாநில விசாரணை பிரிவுக்கு முழு அதிகாரம் உள்ளது!” ன சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்து  அவரை திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி கடந்த டிசம்பர் 12ஆம்  தேதி ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியது.  இருப்பினும், 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் விவேக் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் சக்திவேல் ஆகியோர் சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

அரசின் அதிகாரிகள் இது போன்ற தவறு செய்யும் போது அதனை விசாரணை செய்வதற்கு மாநில விசாரணை பிரிவுக்கு முழு அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்ட நபரின் அலுவலகம் வீடுகளில் சோதனை இடுவதற்கு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முழு அதிகாரம் உள்ளது  எனவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்தனர்.